Thursday, September 1, 2016

விலைவாசி ஏற்றத்துக்கு வழி வகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வைகோ அறிக்கை!

இந்தியன் எண்ணெய் நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் 38 காசும், டீசல் விலையை 2 ரூபாய் 67 காசும் உயர்த்தி இருக்கின்றது. கடந்த ஆகஸ்டு 16 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் என்று குறைக்கப்பட்டது. ஆனால், 15 நாட்களில் இந்த விலை உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை 13 விழுக்காடு அதிகரித்து, ஒரு பீப்பாய் 60 டாலர் ஆனதால், பெட்ரோல் - டீசல் விலைகள் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதுதான் உண்மையான நிலவரம் ஆகும்.

2014-15 ஆம் ஆண்டில் எண்ணெய் இறக்குமதிக்காக 112.7 பில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டது. ஆனால் நடப்பு 2015 -16 ஆண்டில் இந்தத் தொகை பாதி அளவாக 63.96 பில்லியன் டாலர் அளவுக்கு குறைந்துவிட்டது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும் போது அதன் பயன் மக்களுக்கு போய் சேராமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்துவது கண்டனத்துக்கு உரியது ஆகும்.

பண வீக்க விகிதம் 6.2 விழுக்காடு என்ற அளவில் இருப்பதாக மத்திய அரசு பெருமைப்படுகிறது. ஆனால், அதற்கு ஏற்ப விலை வாசி குறையவில்லை என்பதே உண்மை நிலை. பா... அரசு பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. குறிப்பாக பருப்பு வகைகளின் விலை நூறு விழுக்காடு உயர்ந்துவிட்டது. விலை ஏற்றத்தால், மக்கள் தாங்க முடியாத சுமையால் கவலைப்படும நேரத்தில், பெட்ரோல் - டீசல் விலைகளை அதிகரிப்பது மேலும் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும். எனவே, சாதாரண எளிய மக்களையும் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment