Monday, September 5, 2016

சமூகத்தின் மேன்மைக்கும்; நாட்டின் உயர்வுக்கும் அடித்தளம் ஆசிரியர்கள்! வைகோ வாழ்த்து!

சமூகத்தின் மேன்மைக்கும்; நாட்டின் உயர்வுக்கும் அடித்தளமாகத் திகழும் கல்வியைப் புகட்டும் ஆசிரியர் பெருமக்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆசிரியர் பணியிலிருந்து தனது அறிவு, ஆற்றல், உழைப்பால் இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவமேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த செப்டம்பர் 5 ஆம் நாளை, 1962 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். ஆசிரியர் பணியின் மதிப்பு என்பது ஆழ்கடலைப் போன்று அளவிட முடியாதது. நாட்டின் எதிர்கால செல்வங்களான இளம் பிஞ்சுகளை, மழலையர் பள்ளி முதல் உயர் கல்வி வரையில் கல்வி புகட்டி, வாழ்வியல் பண்பாட்டு நெறிகளை ஊட்டி வளர்த்து, புது யுகம் காண அர்ப்பணிப்புடன் தீயாக சீலர்களாக பணிபுரிபவர்கள் ஆசிரியர்கள்.

கல்வி மட்டுமே அனைவரையும் கரை சேர்க்கும் கருவியாக இருக்கின்றது. எனவேதான் ஆசிரியர் சமூகத்திற்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் அளிப்பதில் மக்கள் பேரூவகை கொள்கின்றனர். மாறிவரும் உலக மயச் சூழலில், கல்வி வணிகப் பொருளாக ஆக்கப்பட்டு வரும் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது.

ஆசிரியர் பணி என்பது சமூக மறுமலர்ச்சிக்கும், நாட்டின் எதிர்கhலத்திற்குமான சிறந்த பணி ஆகும். பல இன்னல்களைத் தாங்கி, தன்னலம் பேணாமல் தகைசால் பணியாற்றி, சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வரும் ஆசிரியர் சமுதாயத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். சட்டமன்றத் தேர்தலின்போது தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தி, தமிழக அனைத்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment