Monday, September 12, 2016

பக்ரீத் திருநாள் வாழ்த்து - வைகோ!

ஈதுல் அல்ஹா என்னும் ஈகையின் மாண்பினைக் கூறும் உன்னதத் திருநாள்தான் பக்ரீத் பண்டிகையாக உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். தனது முதிய வயதில் தனக்குப் பிறந்த ஒரே மகனான இஸ்மாயிலை மூன்று முறை தனது கனவில் கண்டதை இறைவனின் கட்டளையாகக் கருதி நபி இப்ராகிம் (அலை) பலியிட முனைந்த தியாகம் இப்புவனம் எங்கும் நினைவு கூரப்படுகிறது.

இஸ்லாமிய வரலாற்றின் தொடக்க கால திருப்புமுனைதான் இந்த நிகழ்ச்சி. நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளைக் கடந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உணர்வுடன் அரபா பெருவெளியில் மக்கள் கடலாக சங்கமித்து, இஸ்லாமிய மக்கள் இந்நாளில் வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

மதச்சார்பின்மைதான் இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்கின்ற அரணாகும். அதனைத் தகர்பதற்கு அராஜக சக்திகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசே பக்க பலமாகச் செயல்படுவது இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, விபரிதமான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே மதச் சார்பின்மையைக் காக்கவும், சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் அனைவரும் உறுதிகொள்வோம்.

பக்ரீத் பண்டிகை நன்னாளில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு இதயமார்ந்த பக்ரீத் வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என வைகோ தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஓமன் இணையதள அணி சார்பிலும் பக்ரீத் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment